Wednesday, August 7, 2013
அது எவ்வளவு அழகாக இருந்தது
ஒரு தேநீர் கோப்பையை போல
கொஞ்சம் கசப்பாயும்
கொஞ்சம் இனிப்பாயும்
அது எவ்வளவு அழகாக இருந்தது
ஒரு புத்தகம் என்றோ
ஒரு வண்ணத்து பூச்சி என்றோ
ஒரு கொடுகிய புறாக் குஞ்சாகவோ
அதை நீங்கள் நினைத்திருக்கலாம்
நீங்கள் நினைப்பதுபோல
அது எதுவாகவும் இருக்கவிலை
அது அதுவாக இருந்தது
ஒரு அவமானத்தின் போது ா ய் பொத்தி அழவும்
காதல் தோல்வியை மறப்பதற்கும்
கூதல் கண்ணாடியின் முன்பு
முகம் பார்த்து பேசிக்கொள்ளவும்
அது எனக்கு தேவையாக இருந்தது
பொம்மைகளோடு விளையாடிய காலம் முதல்
அது என்னுடன்தான் இருந்தது
இப்போது அது இருக்கக் கூடும்
கடலின் அந்தப் பக்கம்
தேம்ஸ் கரையின் அமைதியில்
பழத்தோட்ட மர நிழல் ஒன்றில்
ஏன் வான் வெளியில் தாழப் பறக்கும்
பறவைகளின் வெளிகளிலும்..
யன்னல் திறக்கிறேன்
சிறு தோட்டம்
இலைகளை தூக்கி அலைகிறது காற்று
வலசை பறவைகள் சில
மாலை செவ்வானில் பறந்து திரிகின்றன
விருந்தாளிகளின் வருகைக்காய்
எப்போதோ போடப்பட்ட நாற்காலிகளிலும்
வெள்ளை மேசைகளிலும்
கருகி கிடக்கிறது
சில மஞ்சள் பூக்கள்...
-ஸமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment